சிலர் யோசிக்காமல் ஊழல் செய்து மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்-ஈவிகேஎஸ்
ஈரோடு: சிலர் ஊழல் செய்யும்போது யோசிக்காமல் இப்போது மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திமுக தலைவர் கருணாநிதி கூடா நட்பு கேடில் முடியும் என்று மறைமுகமாக காங்கிரஸை சாடியுள்ளார். இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், கூடா நட்பு கேடாய் முடியும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதையேத்தான் நான் பல மாதங்களுக்கு முன்பே சகவாச தோஷம் என்று கூறினேன். சிலர் ஊழல் செய்யும்போது யோசிக்காமல் இப்போது மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.
தமிழக சட்டசபையில் இடம் பெற்ற ஆளுநர் உரையில் மின் உற்பத்தித் திட்டங்களை அதிகரிப்பது குறித்தும், சமூக விரோதிகளால் அபகரிக்கப்பட்ட சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
அன்னா பதிலளிக்க வேண்டும்
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் பாபா ராம்தேவ் மீதே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. முதலில் இந்தப் புகார்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். ஊழலை எதிர்க்கிறேன் என கூறிக்கொண்டு பெரும் பொருட்செலவில் போராட்டம் நடத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications