டெல்லியில் போலீஸார் நடத்தியது ஜனநாயகப் படுகொலை-அன்னா ஹஸாரே கண்டனம்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கானோருடன் உண்ணாவிரதம் இருந்து வந்த பாபா ராம்தேவை போலீஸார் அங்கிருந்து கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தியும், அவரது ஆதரவாளர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்து விரட்டிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ராம்தேவை டெல்லியை விட்டு வெளியேற்றி டேராடூனுக்குக் கொண்டு போய் விட்டுள்ளது மத்திய அரசு.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிராக போராடி வரும், ஏற்கனவே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தவரான அன்னா ஹஸாரேயும் கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் போராட்டத்தை இப்படி நசுக்கியிருக்கக் கூடாது. மக்களை அரசுக்கு உரிமை இல்லை. பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என்று பாராமல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டெல்லியில் போலீஸார் நடத்தியிருப்பது அப்பட்டனமான ஜனநாயகப் படுகொலையாகும். ஜனநாயகத்தை ஆயுதத்தால் கொலை செய்து குழி தோண்டிப் புதைத்துள்ளது அரசு.
ராம்தேவின் உண்ணாவிரதத்தில் சில தவறுகளும் நடந்தன. அதில் அரசியல்வாதிகள் தலையிட்டால், மேடையில் அரசியல் கட்சியினர் வந்து அமர்ந்தால் நாங்கள் கீழே அமருவோம் என்று கூறி வந்தாம்.
ஆனால், ராம்தேவிடம் நள்ளிரவில் அரசு நடந்து கொண்ட முறை சரியல்ல. குழந்தைகள், பெண்கள் மீது லத்தி சார்ஜ் செய்யும் அளவுக்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள். மேலும் நள்ளிரவில் போய் ராம்தேவிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டது ஏன். அதை ஏன் பகலில் செய்ய அரசுக்கு தைரியமில்லை என்றார்.
முன்னதாக அன்னா ஹசாரேவுடன் லோபால் குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த் கேஜரிவால் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி ரிதம்பரா பங்கேற்றதும், அவரை மேடையில் பாபா பேச அனுமதித்ததும் ஏற்க முடியாதது என்றார். இதை கருத்தையே அந்தக் குழுவின் இன்னொரு உறுப்பினரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும், இவர்களுக்கு முழு ஆதரவு தெரிவித்து வரும் சுவாமி அக்னிவேசும் கூறினார்.
ஆனால், சாத்வி ரிதம்பரா இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதில் எந்தத் தவறும் இல்லை என்று லோக்பால் குழுவில் இடம் பெற்றுள்ள இன்னொரு உறுப்பினரான கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறினார்.
அவர் கூறுகையில், சாத்வி ரிதம்பரா அயோத்தி வழக்கில் குற்றவாளியாக இருக்கலாம். அந்த விஷயத்தில் அவரை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை. அதே நேரத்தில் இது ஊழலுக்கு எதிரான போராட்டம். அதில் ரிதம்பராவும் பங்கேற்பதில் என்ன தவறு. நாளை முஸ்லீல் லீக் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்க முன் வரலாம். அப்போது அவர்களையும் எதிர்ப்பார்களா என்றார்.
ஊழலை ஒழிக்க மத்திய அரசு தீவிரமாக இல்லை-மேதா பட்கர்:
ராம்தேவ் உண்ணாவிரத பந்தலில் இருந்து போலீசாரால் வெளியேற்றப்பட்ட விதத்துக்கு சமூக சேவகர் மேதா பட்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், போலீசார் நடத்திய தடியடி மனிதாபிமானமற்றது, கொடூரமானது. வன்முறை இல்லாமல் நடக்கும் உண்ணாவிரதத்தை எப்படி எதிர்கொள்வது என்று மத்திய அரசுக்கு தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதன் மூலம் ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் மத்திய அரசு உண்மையாகவோ, தீவிரமாகவோ இல்லை என்பது உறுதியாகிறது என்றார்.












Click it and Unblock the Notifications