ஹரித்வார் ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தில் குதித்தார் ராம்தேவ்

டெல்லியிலிருந்து வெளிஇயேற்றப்பட்ட ராம்தேவ் நேற்று இரவு டெல்லிக்கு அருகில் உள்ள உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோய்டாவுக்குச் சென்று அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க முயன்றார். ஆனால் உ.பி. போலீஸார் அவரை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதையடுத்து ஹரித்வாருக்கே மீண்டும் திரும்பிய பாபா ராம்தேவ் அங்கு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், நான் இப்போதைக்கு டெல்லிக்கு மீண்டும் போக மாட்டேன். நோய்டாவுக்கு செல்லவே எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே திங்கள்கிழமை முதல் நான் ஹரித்வாரில் உண்ணாவிரதத்தைத் தொடருவேன்.
நான் டெல்லிக்குள் நுழைய 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அது முடிந்ததும் மீண்டும் நான் டெல்லி செல்வேன். அதை யாரும் தடுக்க முடியாது.
நாட்டின் சட்ட விதிகளை மதிக்க வேண்டும் என்றால், அதை நாங்கள் மதிப்போம். அதேசமயம், நானும் சரி அன்னா ஹஸாரேவும் சரி வீதிகளில் இறங்கிப் போராடுவோம். அதை யாரும் தடுக்க முடியாது.
நான் டெல்லி செல்ல அனுமதி கிடைத்தால், புதன்கிழமை அன்னா ஹஸாரே மேற்கொள்ளப் போகும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நானும் பங்கேற்பேன்.
திக்விஜய் சிங் என்னைப் பற்றி கூறிய கருத்துக்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. பொறுப்பற்றவர்களின் பேச்சுக்களை நான் பொருட்படுத்த விரும்பவில்லை.
எனது உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீது அடிப்படையே இல்லாத புகார்களையும், குற்றச்சாட்டுக்களையும் கூறியுள்ளனர். இவை அனைத்தும் தவறு. அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றார் ராம்தேவ்.












Click it and Unblock the Notifications