தமிழகத்திற்கு உடனடியாக 1000 மெகாவாட் மின்சாரத்தை விடுவிக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திற்கு 2011 ஜூன் முதல் 2012 மே மாதம் வரை மத்திய மின் தொகுப்பிலிருந்து ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கையை எடுப்பதில் தனிப்பட்ட அக்கறையைக் காட்டி பிரதமர் செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
தமிழ்நாடு மின்சார வாரியம், 1500 மெகாவாட் மின்சாரப் பற்றாக்குறையுடன் நிலைமையை சமாளிக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து மின்வெட்டில் தமிழகம் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கான மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
மின்வெட்டு காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. உணவு உற்பத்தியும் பெருமளவில் குறைந்துள்ளது.
பல புதிய மின்உற்பத்தித் திட்டங்கள் கட்டுமானப் பணிகள் அளவிலேயே உள்ளதால், மின்தேவையை சமாளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அனு மின் நிலையம் மற்றும் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 2வது பிரிவு முழுமையாக செயல்பட இன்னும் 2 ஆண்டுகளாகும். எனவே தமிழகத்திற்கு 1000 மெகாவாட் மின்சாரத்தை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications