குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது
மேட்டூர்: காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 6 ம் தேதியான இன்று திறக்கப்பட்டது. நல்ல நேரத்தில் அணையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
திருச்சி, தஞ்சை, திருவா ரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால், பல ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் ஜூன் மாத கடைசியிலும், ஜூலை மாதத்திலும் அணை திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாலும், தென்மேற்குப் பருவ மழை தொடங்கிவிட்டதாலும் , இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜூன் 6 ம் தேதியே தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு அறிவித்தது.
மேட்டூர் அணை கட்டப்பட்டது முதல் இதுவரை குறித்த காலத்திற்கு முன்பு அணை திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 115.81 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,534 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இன்று காலை நல்ல நேரமான ஒன்பதரை மணியிலிருந்து பத்தரை மணிக்குள், பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணை திறக்கப்பட்டுள்ளதன் மூலம், சுமார் 17லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
தற்போது இருப்பில் உள்ள தண்ணீர் 90 நாட்களுக்கான குறுவைப் பயிருக்குப் போதுமானதாகும். இருப்பினும் சம்பா சாகுபடிக்கு கர்நாடகத்திலிருந்து பெருமளவில் தண்ணீர் வர வேண்டியது அவசியமாகும். அதற்கு தென் மேற்குப் பருவ மழை நன்கு பெய்து, கர்நாடக அணைகள் நிரம்ப வேண்டும்.












Click it and Unblock the Notifications