ஊழல் புகார் தொடர்பாக தயாநிதி மாறன் நீக்கப்படுவாரா?-பிரதமர் நழுவல்!
டெல்லி: ஏர்செல் விவகாரம் மற்றும் பிஎஸ்என்எல் இணைப்புகளை துஷ்பிரயோகம் செய்தது ஆகிய புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் நழுவினார் பிரதமர் மன்மோகன் சிங்.
இதுகுறித்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மாறன் ராஜினாமாவைக் கோருவீர்களா என்று அவர்கள் கேட்டதற்கு, இந்த விவகாரங்கள் அனைத்தும் சட்ட அமலாக்க பிரிவுகளின் விசாரணையில் உள்ளன. அவர்கள் எந்தவிதமான அச்சமும், பாரபட்சமும் இல்லாமல் தங்களது பணியை தொடர அனுமதிப்போம் என்று மட்டும் தெரிவித்தார்.
மாறனின் ராஜினாமாவைக் கோருவேனா, இல்லையா என்பது குறித்து நேரடியாக விளக்கம் எதையும் தரவில்லை.
நேற்று ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளது நினைவிருக்கலாம். அப்போது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மாக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று தயாநிதி மாறன் தன்னை நிர்ப்பந்தப்படுத்தியதாக தெளிவாக கூறியுள்ளார் சிவசங்கரன். இந்த வாக்குமூலத்தையே முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்கள் தயாநிதி மாறனுக்கு பெரும் சோதனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications