மு.க.அழகிரியின் வீட்டில் கல்வீசித் தாக்கிய அதிமுக பிரமுகர் கைது
மதுரை: மதுரையில் உள்ள மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் வீடு மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகரை வீட்டுக் காவலாளி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். அவரைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை டி.வி.எஸ். நகர் பகுதியில் அழகிரியின் வீடு உள்ளது. இன்று காலை மேலூர் கோர்ட்டில் ஆஜராவதற்காக அழகிரி போய் விட்டார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு வந்த ஒரு நபர் கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதைப் பார்த்த வீட்டு வாட்ச்மேன் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
அந்த நபர் முதலில் இன்று காலையில் இன்னோவா காரில் அழகிரி வீட்டுக்கு வந்துள்ளார். வாட்ச்மேனை அணுகிய அவர் அழகிரியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவரை இப்போது பார்க்க முடியாது என்று வாட்ச்மேன் கூறியதால் திரும்பிப் போய் விட்டார். அதன் பின்னர் அழகிரி வீட்டை விட்டுக் கிளம்பிய பிறகு வந்த அவர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
விசாரணையில் அவரது பெயர் விஜயன் என்று தெரிய வந்தது. அதிமுகவைச் சேர்ந்தவராம். சூர்யா நகரில் வசித்து வருகிறார்.
நான் தீவிர அதிமுக விசுவாசி. அதனால்தான் அழகிரி வீட்டின் மீது கல்வீசினேன். வீடு மட்டுமல்ல ஏற்கனவே அவரது கல்யாண மண்டபத்தின் மீதும் வீசினேன். இதற்காக சிறைக்குப் போகவும் நான் தயார். அதற்கெல்லாம் கலங்க மாட்டேன் என்று கூறினாராம்.
இந்த சம்பவம் மதுரையி்ல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications