பிரதமரை மன்னித்து விட்டேன், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வருவேன்: ராம்தேவ்
ஹரித்வார்: பிரதமர் மன்மோகன் சிங்கை நான் மன்னித்து விட்டேன். ஊழல் ஒழிப்பு குறித்து மீண்டும் பேச விரும்பினால், மத்திய அரசு அழைத்தால் நான் கலந்து கொள்ளத் தயார் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஹரித்வாரில் தனது ஆசிரமத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் பிரதமரையும், மத்திய அரசையும், ராம்லீலா மைதான செயல்களுக்காக மன்னித்து விடுகிறேன். ஆனால் ஜனநாயகத்தை அவர்களை நான் மன்னிக்க முடியாது, மக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
மீண்டும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதற்கு நான் தயார். அவர்கள் என்னை அணுகினால் நான் பேசத் தயார். அது ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான பேச்சாக அமைய வேண்டும் என்றார் ராம்தேவ்.
நேற்றுதான் டெல்லி காவல்துறையின் அட்டகாசத்தை கடுமையாக குறை கூறிப் பேசியிருந்தார் ராம்தேவ். மேலும் தன்னைக் கொல்ல சதி நடந்ததாகவும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு பிரதமரும், சோனியா காந்தியும்தான் காரணம் என்றும் அவர் கடுமையாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராம்தேவின் சொத்துக்கள் குறித்தும், அவருக்குச் சொந்தமானதாக கருதப்படும் 200 நிறுவனங்கள் குறித்தும் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் பிரதமரை மன்னித்து விட்டதாகவும், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் ராம்தேவ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications