இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள்
கோவை: ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கான அரசு உதவித்தொகையை பெற வசதியான நபர்களும் விண்ணப்பித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி உதவி
ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கான நிதி உதவி திட்டத்தை தமிழ் நாடு அரசு பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற 65 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்; வாரிசுகள் இருக்கக் கூடாது; கணவரால் கைவிடப்பட்டவர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் உதவித் தொகை பெற தகுதி உடையவர்கள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
குவிகிறது விண்ணப்பங்கள்
தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் உதவித்தொகை 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உதவித் தொகையைப் பெற பலரும் முட்டி மோதுகின்றனர். உதவித் தொகையை எப்படியாவது பெற உற்றார், உறவினர்கள், வாரிசுகள், சொத்து சுகம் உள்ளவர்கள் என பல தரப்பினரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்காக போலி சான்றிதழ்களை தயாரித்து இணைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பங்கள் மலை போல குவிந்துள்ளது. இதனால் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்ய முடியாமல் வருவாய்த் துறையினர் திணறுகின்றனர்.
எச்சரிக்கை
ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கான அரசு உதவித்தொகையினை தவறான வழிகளில் பயன்பெற வசதி மிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இது விதிகளுக்கு புறம்பானது. தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். போலி சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிப்பவர்கள், உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறும் ஏஜெண்டுகள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications