பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மரணம்

மராட்டிய மாநிலம் பதான்பூரில் 1915ம் ஆண்டு பிறந்த இவரது மாடர்ன் ஓவியங்கள் உலகளவில் 1 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வந்தன. இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட ஹூசேன் சர்ச்சைகளில் சிக்குவதிலும் பேர் போனவர்.
கிறிஸ்டி பற்றி இவர் வரைந்த ஓவியம் 2 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்துக் கடவுள்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார்.
நடிகை மாதுரி தீக்ஷித்தை தேவதையாக உருவகப்படுத்தி ஹூசேன் வரைந்த ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. மாதுரி மீது பித்தாகிவிட்டேன் என்று கூறிய இவர், மாதுரியை வைத்து கஜகாமினி என்ற இந்திப் படத்தையும் இயக்கினார்.
பிறகு தபுவை வைத்து மீனாக்ஷி- தி டேல் ஆப் த்ரீ சிட்டிஸ் என்ற படத்தை இயக்கினார். ஆனால் வெளியான சில தினங்களில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக இந்தப் படம் தூக்கப்பட்டது.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மாரடைப்பால் இன்று காலமானார்.
நாட்டை விட்டு வெளியேறினாலும் நாட்டின் மீது அதீத பற்று கொண்டவர். இந்தியாவில் தன்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை என்பது குறித்து தொடர்ந்து தனது கவலையைத் தெரிவித்து வந்தவர் ஹூசேன்.
அவரது உடல் அடக்கம் லண்டனிலேயே நடைபெறும் என்று தெரிகிறது.
இந்தியாவின் உயரிய சிவில் விருதுகள் பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்றவற்றைப் பெற்றவர் ஹூசேன். 1986ல் ராஜ்ய சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவின் மிக அதிக ஊதியம் பெற்ற ஓவியர் எனப் புகழப்பட்ட எம்எஃப் ஹூசேன், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இவரது மறைவு தேசிய இழப்பு என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications