அதிமுக தலையீட்டால் ரூ. 41 லட்சம் மதிப்பிலான பணிகள் ரத்து: பஞ். தலைவர் புகார்
நெல்லை: மேலநீலிதநல்லூர் பஞ்சாயத்து யூனியனில் ரூ. 41 லட்சம் மதிப்பிலான பணிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேலநீலிதநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சிங்கபுலி பாண்டியன் (மதிமுக) மற்றும் கவுன்சிலர்கள் சிலர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது,
மேலநீலிதநல்லூர் பஞ்சாயத்து யூனியன் குழு தீர்மானத்தின் படி 26 பணிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது. இதில் மேலநீலிதநல்லூர் அதிமுகவினர் சிலர் அமைச்சர் பரிந்துரையின் பேரில் ரூ. 41 லட்சம் பொது நிதியை வைத்து 16 பணிகளை மேற்கொள்ள கடிதம் எழுதினர்.
இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதில் ஒன்றிய நிர்வாகத்தில் தலையிடுவதற்கு அதிமுகவுக்கு அதிகாரம் இல்லை என்பதால் டெண்டர் நோட்டீசில் உள்ளபடி டெண்டர் வைக்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் அமைச்சர் பரிந்துரை செய்யும் வேலைகளையும் பரீசிலனை செய்து ஒன்றிய கவுன்சிலில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஆணையாளரிடம் நேரடி அறிவுரை வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒப்பந்த புள்ளி வழங்கப்பட்ட பணிகளை நிர்வாக காரணங்களால் நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நிர்வாகத்தில் அதிமுகவின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஒன்றிய தீர்மானம் மூலம் தேர்வு செய்த பணிகளுக்கு டெண்டர் விட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications