ஈழத்திற்கு எம்.எல்.ஏக்கள் குழுவை அனுப்ப டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை
சென்னை: போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்திற்கு தமிழக எம்.எல்.ஏக்கள் குழுவை அனுப்பி உண்மை நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டால்தான் அங்கு தமிழர்கள் உரிமையைப் பெற முடியும்.இலங்கையில் உள்ள நிலைமையை நேரில் கண்டறிய தமிழக எம்.எல்.ஏ.க்கள் குழுவை அனுப்ப வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை குறித்துப் பிரதமருக்கு தெரிவிக்க முடியும் என்றார்.
பாமக சார்பில் கலையரசன் பேசுகையில், தனி ஈழம்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது பா.ம.க.வின் நிலை. இந்தத் தீர்மானத்தை பா.ம.க. முழு மனதாக வரவேற்கிறது. முதல்வருக்கும், அரசுக்கும் வெகுவாக பாராட்டு தெரிவிக்கிறோம் என்றார்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், பொருளாதாரத் தடை விதிப்பது மட்டுமின்றி இலங்கையுடன் தூதரக உறவுகளையும் துண்டிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications