இலங்கையில் சிக்கியுள்ள 4 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை-பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: மோசமான வானிலை காரணமாக தவறுதலாக இலங்கை கடற்பகுதிக்குள் போய் விட்ட நான்கு தமிழர்களை இலங்கை சிறையிலிருந்து மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஜெயகுமார், பிரபாத், சுந்தர், மாரிமுத்து. இந்த நான்கு பேரும் இம்மாதம் 1ம் தேதி இரவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது பலத்த கடற்காற்று வீசியது. புயலில் சிக்கி படகு சேதமடைந்தது. கடலில் குதித்த அவர்கள் 8 மணி நேரம் நீந்தி, கடும் போராட்டத்துக்குப் பிறகு இலங்கைக் கடற்பகுதியான நைனாத் தீவுப் பகுதியில் கரை சேர்ந்தனர்.
அவர்கள் 3ம் தேதி கெயிட்ஸ் போலீஸ் சோதனைச் சாவடியில் பின்னர் சரணடைந்தனர். கெயிட்ஸ் போலீஸார் அவர்களைக் கைது செய்து முறைப்படி, ஜூன் 6ம் தேதி கெயிட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். ஜூன் 17ம் தேதிவரை அவர்கள் போலீஸ் காவலில் இருக்க அனுமதித்தது நீதிமன்றம்.
தமிழக மீனவர்கள் நான்கு பேரின் குடும்பத்தினரும், ராமேஸ்வரம் மீனவர் அமைப்புகள் சிலவும் இந்த 4 பேரையும் உடனடியாக தமிழகத்துக்கு மீட்டு வருவது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதன் அடிப்படையில், இலங்கை அரசிடம் தகவல் அளித்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 4 மீனவர்களையும் உடனடியாக தமிழகத்துக்கு மீட்டு வர இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications