அனுமதியின்றி பாறைகள் உடைப்பு: முன்னாள் எம்பி தம்பி மீது வழக்கு
திங்கள்சந்தை: அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி பாறைகளை உடைத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதத்தின் தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி பாறைகளை வெடி வைத்து உடைத்து கடத்துபவர்கள் மீது கனிம வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கல்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட வில்லுக்குறி ஆளுர் கிராம பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள பாறைகளை சிலர் வெடித்து வைத்து உடைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தி வருவதாக புகார் வந்தது. இதையடுத்து அவ்வப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. மோகனசந்திரன், கல்குளம் தாசில்தார் பவானி ஜீஜா மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை வில்லுக்குறி அருகே உள்ள ஆணைக்கிடங்கு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வில்லுக்குறி கிராம நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் அனுமதியில்லாமல் பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அங்கு 35 டெட்டனேட்டர்கள், 47 பவர் டெல் ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கீழ கருப்புகோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது கனிம வள பாதுகாப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். அவர் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் தம்பி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications