ராணா வழக்கின் தீர்ப்பால் நமக்குப் பின்னடைவு ஏற்படாது-இந்தியா
டெல்லி: தஹவூர் ராணாவுக்கு மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று அமெரிக்க கோர்ட் அளித்துள்ள தீர்ப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை செயலாளர் யு.கே.பன்சால் தெரிவித்துள்ளார்.
ராணா தீர்ப்பால் இந்தியாவில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மும்பை பயங்கரவாத செயலில் ராணாவுக்குத் தொடர்பில்லை என்று சிகாகோ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் யு.கே.பன்சால் கூறுகையில், இதை பின்னடைவாக கருதவில்லை. பிற நாடுகளின் அரசுத் தரப்பு வாதங்கள், சாட்சியங்களை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை வைத்து நமது நாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடருவார்கள்.
இந்த தீர்ப்பு குறித்து இந்திய அரசு முழுமையாக ஆராய்ந்து பார்த்து பின்னர் தனது கருத்தைத் தெரிவிக்கும் என்றார்.
இதற்கிடையே, ராணா வழக்கின் விசாரணை, ஹெட்லியின் சாட்சியம் ஆகியற்றின் மூலம் மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் அம்பலமாகியுள்ளன. எனவே மும்பை சம்பவத்தில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசுத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ராணா தீர்ப்பு குறித்து மும்பை தாக்குதல் சம்பவ வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறுகையில், இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications