ஸ்லீப்பர் கோச் ஆம்னி பஸ்கள்-ஆய்வு செய்கிறது காவல்துறை
காஞ்சிபுரம்: வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே நடந்த கோரமான சாலை விபத்தைத் தொடர்ந்து ஸ்லீப்பர் கோச்களைக் கொண்ட ஆம்னி பஸ்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது தமிழக காவல்துறை.
இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி சைலேந்திர பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், காவேரிப்பாக்கம் விபத்தில் சிக்கிய பேருந்தை முழுமையாகஆய்வு செய்யவுள்ளோம். தடயவியல் சோதனையும் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் இதுபோன்ற ஸ்லீப்பர் கோச் பஸ்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்படும்.
இதுபோன்ற பேருந்துகளில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்த பரிந்துரை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற கோரமான விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காவேரிப்பாக்கம் விபத்தில் பயணிகளைக் காப்பாற்றுவதை விட்டு விட்டு முதல் ஆளாக டிரைவர் தப்பியுள்ளார். பயணிகள் பெரும் உயிர்ப் போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவசர கால கதவுகளைத் திறக்க வேண்டிய பொறுப்பில் இருந்த டிரைவர் அதை தவற விட்டுள்ளார்.
டீசல் டேங்க் வெடித்ததும், ஏசி இயந்திரம் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததும் பஸ் முழுமையாக எரிந்து சாம்பலாக முக்கியக் காரணமாகி விட்டது என்றார் சைலேந்திர பாபு.












Click it and Unblock the Notifications