திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரிக்க சரத்குமார் கோரிக்கை!

தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் பங்கு கொண்டு சரத்குமார் பேசியதாவது:
தமிழகத்தை முதல் மாநிலமாக, முன்மாதிரி மாநிலமாக திகழ செய்வார் என்ற நம்பிக்கையில் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் வாக்களித்து உள்ளார்கள். தமிழக மக்களின் எண்ணங்களை ஜெயலலிதா நிறைவேற்றுவார்.
கவர்னர் உரையில் மக்கள் நலனை கொண்ட திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக பயன்தர கூடியவை. தொலைநோக்கு திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.
புதிய தலைமை செயலகம் கட்டுவதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்த அரசு தெரிவித்துள்ளது. முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால், அதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதே சமயம் புதிய தலைமை செயலகத்தை சீரமைத்து, மக்களுக்கு உதவும் வகையில் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் .
லண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகம் போன்றோ, பாரீசில் உள்ள ஓவிய கண்காட்சி போன்றோ மிகப்பெரிய கலை அம்சங்கள் நிறைந்த சுற்றுலா மையமாக அதை பயன்படுத்தலாம்.
11 தாலுக்காக்களை கொண்ட திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்தில் சுற்றுலா, வேளாண்மை போன்ற துறைகளை இந்த நடவடிக்கை மூலம் வளர்க்க முடியும்.
கச்சத்தீவை மீண்டும் பெறும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை சமத்துவ மக்கள் கட்சி மனமார வரவேற்றுகிறது.
கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையும் வரவேற்கிறோம்.
தென் மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு இந்த அரசு முன்னுரிமை அளித்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
வரும் பட்ஜெட்டின் போது விவசாயத்திற்கு என்று தனி நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்து நாட்டுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications