காங். கூட்டணி திமுகவுக்கு நல்லதல்ல: திருமாவளவன் கருத்து
மதுரை: காங்கிரஸுடன் கூட்டணி உறவை நீடிப்பது திமுகவுக்கு நல்லதன்று. எனவே, கூட்டணி குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கின்றது.
சட்டசபையில் ராஜபக்சே பேர் குற்றவாளி என்றும், இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம். கச்சத்தீவை திரும்பப் பெற நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்காக அதிமுக அரசை பாராட்டுகிறேன்.
இந்த தீர்மானங்கள் வெறும் அவைக்குறிப்புகளாக இருந்துவிடாமல், அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த அதிமுக மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.
ஏழைப்பெண்களின் திருமணத்தி்ற்கு 4 கிராம் தங்கம் கொடுப்பது நல்ல திட்டம். ஆனால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 24 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
நாட்டில் அடிமட்டத்தில் இருந்து நுனி வரை ஊழல் உள்ளது. 2 ஜி ஊழல் விசாரணை ஒரு பட்சமாக நடக்கிறது. ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது நல்ல விஷயம் தான். அப்படி உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் தனக்கு எப்படி ஆயிரத்து 13 கோடி ரூபாய் சொத்து வந்தது என்பதை வெளியிட வேண்டும்.
காங்கிரஸுடனான கூட்டணி உறவை நீடிப்பது திமுகவுக்கு நல்லதன்று என்பது எங்கள் கருத்து. எனவே, கூட்டணி குறித்து திமுக பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கை தமிழர் பிரச்சினை தவிர்த்து சட்டசபை தேர்தல் நேரத்தில் திமுக-காங்கிரஸ் இடையே கசப்பான நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் திமுகவை மிரட்டி 63 இடங்களை வாங்கியது. இதனாலேயே இந்த கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் பணி புரிய முடியாமல் இருந்தது. சட்டசபை தேர்தலில் தோல்வியும் ஏற்பட்டது. எனவே காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது நல்லதன்று என்று திமுகவிடம் மீண்டும் வலியுறுத்துவோம்.
வரும் 14-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடக்கிறது. இதில் உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு தேர்தல் காரணமாக எங்கள் கட்சி சார்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கொண்டாடவிருந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழா வரும் 25-ம் தேதி கொண்டாடவிருக்கிறோம்.
செங்கல்பட்டு, பூந்தமல்லி அகதிகள் முகாம்களில் எந்த வழக்கும் பதியாமல் சுமார் 20 ஆண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications