திமுக உயர் நிலைக் குழுத் தீர்மானங்களை விளக்கி கோவை, ஈரோட்டில் கூட்டம்-ஸ்டாலின் பேசுகிறார்
சென்னை: திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களை விளக்கி கோவையிலும், ஈரோட்டிலும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என்று கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பத்து தீர்மானங்களை நிறைவேற்றினர். இதுகுறித்து மக்களிடம் விளக்கிக் கூறுவதற்காக ஜூன் 20ம் முதல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் ஒரு தீ்ர்மானம் நிறைவேற்றினர். அதன்படி தற்போது ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அன்பழகன் விடுத்துள்ள அறிக்கை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 10-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநிலமெங்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, தி.மு.க. சொற்பொழிவாளர்கள் அவர்களுக்கென்று குறிப்பிட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர கழக செயலாளர்கள் மேற்படி கூட்டங்களை சிறப்பாக நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், வரும் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தொடர்ந்து பகுதி, நகர, ஒன்றிய, பேரூர்க் கழக செயலாளர்கள் உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மான விளக்கக் கூட்டங்களை நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வரும் 19-ந் தேதி கோவையிலும், 20-ந் தேதி ஈரோட்டிலும் நடைபெறும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டங்களில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
20-ந் தேதி விழுப்புரத்திலும், 21-ந் தேதி கடலூரிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். 22-ந் தேதி கிருஷ்ணகிரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் பங்கேற்கிறார்.
21-ந் தேதி வேலூரிலும், 22-ந் தேதி தென்சென்னையிலும் நடக்கும் பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கலந்து கொள்கிறார்.
20-ந் தேதி திருவண்ணாமலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் புலவர் இந்திரகுமாரி பங்கேற்கிறார் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications