சமச்சீர் கல்வி-உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை அரசு அப்பீல்?

சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு கல்வியாண்டுக்கு அமல்படுத்துவதில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்து அறிவித்தது. இதுதொடர்பாக சட்டத் திருத்த மசோதாவையும் சட்டசபையில் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து பொது நலன் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கும் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. நடப்பு ஆண்டு சமச்சீர் கல்வியையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சபீதா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்நது அமைச்சர் சண்முகம், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் குழு டெல்லி வந்துள்ளது.
அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் வைத்து இவர்கள், டெல்லி வழக்கறிஞர் குழுவுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பின்னர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சண்முகம் அங்கு சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசித்தார்.
இதைத் தொடர்ந்து நாளை அல்லது நாளை மறு நாள் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது உச்சநீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே விடுமுறைக்கால பெஞ்ச்சில் வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications