மத்திய அரசிடம் ரூ.1.8 லட்சம் கோடி மானியம் கேட்கும் ஜெயலலிதா!

டெல்லியில் பிரதமரைச் சந்தித்த அவர் இது தொடர்பாக 30 பக்க கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
இலங்கையில் மனித உரிமை மீறல், போர்க் குற்றச் செயல்களுக்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தில் தமிழ் மக்கள் முழுதாக பங்கேற்க இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். பிற நாடுகளுடன் சேர்ந்து இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தின் மற்ற மக்களுக்கு உரிய அனைத்து சமூக நலத்திட்டங்களும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. அதற்குக் கூடுதலாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14.1 கோடி செலவாகும். அதை மத்திய அரசு வழங்க வேண்டும்.
பூம்புகார், முகையூரில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்து ராமேஸ்வரத்தில் மீன்பிடிப் படகுகள் அதிகம் சேராமல் தவிர்க்க வேண்டும். விசைப் படகுகளுக்கு டீசலுக்கான மத்திய கலால் வரி விலக்கு தருவதற்கான விதிகள் நடைமுறைக்குப் பொருந்தாமல் உள்ளன. எனவே அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கடலோரப் பாதுகாப்புப் படைக்கு ரூ.107 கோடியில் புதிய வாகன வசதிகள் செய்து தர வேண்டும்.
தமிழ்நாடு மின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை கடனில் இருந்து மீட்கவும், குவிந்த நஷ்டத்தைக் குறைக்கவும் ரூ.40,000 கோடி உதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் 10 இடங்களில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3,000 மெகாவாட் திறனுக்கு 10 சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க, தெருவிளக்குகள் அமைக்க ரூ.45,000 கோடி தேவை.
கூடங்குளம் அணுமின் திட்டம், நெய்வேலி அனல்மின் திட்டம்-2, கல்பாக்கம் அணுமின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யூரில் 4,000 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
சென்னை மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ.16,650 கோடி செலவாகும். இதற்கு தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் கீழ் நிதியுதவி செய்ய வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 68 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ.10,200 கோடி செலவாகும். இந்தத் தொகையை சிறப்பு மானியமாக மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவிரியை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு நதிகளுடன் இணைத்து வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும், உபரி நீரை பாசனத்துக்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது நீர்வழித் தொகுப்பை உருவாக்கி வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கும் உதவியாக இருக்கும் இதற்கு ரூ.4,000 கோடி செலவாகும்.
இந்திய அரசு அறிவிக்கை செய்துள்ள ஐந்து உள்நாடு நீர்வழித் தடங்களில் பழவேற்காடு ஏரியில் இருந்து புதுவை வரையிலான 132 கி.மீ. நீளமான பாதை தமிழகத்தில் வருகிறது. இது சரக்கு, பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாவுக்கு உதவியாக இருக்கும். இதற்கு ரூ.650 கோடி செலவாகும். இந்த தொகைகளை மத்திய அரசு வழங்க பரிசீலிக்க வேண்டும்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பாயம் 5.2.2007ல் அளித்த இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் (கெஜட்) வெளியிட வேண்டும். இந்தத் தீர்ப்பை விரைந்து செயல்படுத்தும் வகையில் அதற்கென தனியாக 'காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம்' என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கேரள அரசு அணை குறித்த எந்த ஆய்வையும், விசாரணையையும், ஆரம்ப கட்டப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. இதற்கான அறிவுரையை அந்த மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கிட வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு தனது ஆய்வுகளை முடித்திட வேண்டும். அதற்கு முன்பாக, கேரள அரசுக்கு எந்த ஒரு அனுமதியையும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையோ, நீர் வளத் துறையோ வழங்கிடக் கூடாது. அணைப் பகுதியில் தமிழகம் மேற்கொள்ளும் பராமரிப்புப் பணிகளை கேரள அரசு தடுக்கக் கூடாது. இதற்கான உறுதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்.
பாலாற்றின் குறுக்கை அணைகளைக் கட்டும் ஆந்திர அரசின் முயற்சிகளைத் தடுக்க வேண்டும். இதுதொடர்பான அறிவுரையை அந்த மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழக அரசு கடன் சுமையைக் குறைக்க ஒரு லட்சம் கோடி ரூபாயை உதவியாக மத்திய அரசு வழங்க வேண்டும். இதுதவிர மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவியை வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு வகைகள், எண்ணெய், மசாலாப் பொருள்கள் வழங்குவது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,036 கோடி செலவாகிறது. இதில் பாதியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மூன்றாம் நிலை மருத்துவமனைகளை மேம்படுத்தி கிராம மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதற்காக அடுத்த இரு ஆண்டுகளில் மத்திய அரசு சிறப்பு மானியமாக ரூ.1800 கோடி வழங்க வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்த அடுத்த இரு ஆண்டுகளில் ரூ.500 கோடி தேவைப்படும்.
வளரும் நகர்ப்புறங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி தேவைப்படும். கர்ப்புறங்களின் குடிநீர் சப்ளையை மேம்படுத்த ரூ.9,500 கோடி வழங்க வேண்டும்.
சாலை வசதியை மேம்படுத்த ரூ.5,700 கோடி, பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற ரூ.1,100 கோடி தேவை. நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்க, ஏற்கெனவே உள்ளவற்றை மேம்படுத்த ரூ.20,000 கோடி தேவை.
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரத்தில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.) முந்தைய ஆண்டு விதிமுறையையே தொடர அனுமதிக்க வேண்டும்.
முன்னர் மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்.பி.சி.) பிரிவு மாணவர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40 சதவீதம் என இருந்தது. இதுபோல் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) பிரிவு மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலை இருந்தது.
ஆனால், புதிய விதிமுறைப்படி 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதால் இந்த மூன்று பிரிவு மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. தொழில்கல்வி பயின்று, சமூக பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும். மேலும் இந்த முக்கிய முடிவை எடுக்கும் முன், உயர் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநில அரசுடன் ஏ.ஐ.சி.டி.இ. கலந்தாலோசிக்கவும் இல்லை. அதற்கான உரிய காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
எனவே, சமூக நீதியை நிலைநாட்டவும், நாட்டின் தொழில்நுட்பத் திறனை அதிகரிக்கச் செய்யவும் 2010-11 கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணையே, இப்போதும் தொடர அனுமதிக்க வேண்டும்.
குறுவை பருவ விவசாயத்துக்கு தமிழ்நாட்டுக்கு கூடுதல் டி.ஏ.பி. உரம் தேவைப்படுகிறது. இந்த மாதம் காரைக்கால் துறைமுகத்துக்கு 25 ஆயிரம் டன் உரம் வருகிறது. இதை தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டும். குறுவை பருவத்துக்கு ஒதுக்கப்பட்ட முழு அளவிலான உரத்தை தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டும். இதனால் கூடுதல் உணவுப்பொருள் உற்பத்தி செய்ய முடிவும். ரூ.450 கோடி செலவில் விவசாய சிறப்பு தொழில்நுட்ப திட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசின் கடன் அளவை குறைப்பதற்காகவும், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், நிதிநிலைமையை மேம்படுத்துவதற்காகவும் ரூ.1 லட்சம் கோடி சிறப்பு உதவி தொகையாக மத்திய அரசு வழங்க வேண்டும். 6வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதால் அதிகமான சம்பளம் மற்றும் பென்சன் காரணமாக, தமிழக அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
2010-11ம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை, முந்தைய ஆண்டில் இருந்த ரூ.3,531 கோடியில் இருந்து ரூ. 3, 942 கோடியாக அதிகரித்துவிட்டது. கடந்த 2007-08ம் ஆண்டில் இருந்து அரசின் நிதிப்பற்றாக்குறை ஏறத்தாழ 5 மடங்கு உயர்ந்து ரூ.17,888 கோடியாக அதிகரித்துவிட்டது.
இதன் விளைவாக கடந்த 5 ஆண்டுகளில், மாநில அரசின் கடன் இரட்டிப்பாக உயர்ந்து, அதாவது ரூ.57,475 கோடியில் இருந்து ரூ.1 லட்சத்துத்து ஆயிரத்து 541 கோடியாக அதிகரித்துவிட்டது. இந் நிலையில் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு இந்த அளவுக்கு அதிகமான நிவாரண உதவி அவசியமாகிறது.
பஞ்சு ஏற்றுமதியை 55 லட்சம் பேல்களில் இருந்து 65 லட்சம் பேல்களாக அதிகரிப்பதற்கு மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்டு வரும் முயற்சியினால் பஞ்சுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதுடன் உள்நாட்டு சந்தையில் பஞ்சு விலையை உயர்த்துவதற்கு வழிவகுத்துவிடும். மேலும் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் மற்றும் நெசவு தொழிலில் குறிப்பாக கைத்தறி தொழிலில் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது மனுவில் கோரியுள்ளார். தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை சென்னை திரும்பினார்.












Click it and Unblock the Notifications