சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார்.
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியைத் தொடரலாம். பிற வகுப்புகளில் அதை அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும். இந்தக் குழு தனது அறிக்கையை 2 வாரத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஒரு வாரத்திற்குள் உயர்நீதிமன்றம் பரிசீலித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் தேவேந்திர நாத் சாரங்கி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, பள்ளிக் கல்வி இயக்குநர் வசுந்தரா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதாக தெரிகிறது. அதேசமயம், இந்தப் பாடப் புத்தகங்களில் கோவை செம்மொழி மாநாடு குறித்து எதுவும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறும் முதல்வர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் உச்சநீதிமன்ற உத்தகரவுப்படி நிபுணர் குழு அமைப்பது தொடர்பாகவும் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications