இலங்கையிலிருந்து 4 தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இந்தியாவிடம் ஒப்படைப்பு
ராமேஸ்வரம்: இலங்கையில் நீதிமன்றக்காவலில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்களான ஜெயகுமார், பிரபாத், சுந்தர், மாரிமுத்து ஆகியோர் ஜூன் 1ம் தேதி இரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த கடற்காற்று வீசியதால் புயலில் சிக்கி அவர்கள் சென்ற படகு சேதமடைந்தது. கடலில் குதித்த மீனவர்கள் நீந்தி சென்று இலங்கைக் கடற்பகுதியான நைனாத் தீவுப் பகுதியில் கரை சேர்ந்தனர்.
எந்த வித ஆவணங்களும் இன்றி இலங்கை கடற்பகுதியில் இருந்ததாக அவர்கள் நான்கு பேரையும் கெயிட்ஸ் போலீசார் கைது செய்து ஜுன் 6ம் தேதி கெயிட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். அவர்களை ஜூன் 17ம்வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மீனவர்களை பத்திரமாக மீட்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு மீனவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவும் மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து இலங்கை நீதிமன்றத்தில் இருந்த 4 மீனவர்களும் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை இந்திய கடற்படை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை போலீசார் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications