சென்னை-பெங்களூர் ஏசி ஆம்னி பஸ்சில் தீ: பயணிகள் தப்பினர்
ஆம்பூர்: சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற தனியார் ஆம்னி ஏசி பஸ் தீப்பிடித்துக் கொண்டது. ஆம்பூர் அருகே இந்த சம்பவம் நடந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
சென்னையிலிருந்து பெங்களூரை நோக்கி நேற்று அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை பெங்களூர் சாம்ராஜ்பேட்டை திப்பு நகரைச் சேர்ந்த அப்துல்லா (54) என்பவர் ஓட்டிச் சென்றார்.
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நின்றபோது பேருந்தின் பின் பக்கத்தில் உள்ள என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதையடுத்து பஸ் தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து தூக்கத்தில் இருந்த 14 யணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ்சின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு பேருந்தில் ஏசி இல்லை-பயணிகள் சாலை மறியல்:
இந் நிலையில் அரசுப் பேருந்தில் குளிர்சாதன வசதி இல்லாததை கண்டித்து பயணிகள் நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற அரசுப் பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவர்களிடம் குளிர்சாதன வசதிக்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் பேருந்து புறப்பட்டது முதல் ஏசி வேலை செய்யவில்லை. அத்துடன் சென்னையில் இருந்து திருவள்ளூர் வருவதற்குள் இரண்டரை மணி நேரம் ஆகிவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் திருவள்ளூர் வந்ததும், பேருந்தை நிறுத்தச் சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பினர்.












Click it and Unblock the Notifications