யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல்: திருமா-தங்கபாலு கண்டனம்
சென்னை: யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 16ம் தேதி யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் சிங்களப்படை காடையர்கள் காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் இடத்தில் உள்ள சைவ மகாஜன சபை அரங்கில் நடந்த இக்கூட்டத்தினுள் சிங்களப் படையினர் நுழைந்து 'அனுமதி பெற்றிருக்கீர்களா?' எனக் கேட்டு வன்முறையில் இறங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களையும் குறிவைத்து தாக்க முயன்றுள்ளனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மெய்க்காவலர்கள் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறையில் சுதர்சன் என்கிற இளைஞர் சிங்களப் படையினரின் வெறித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி சுயநிலையை இழக்கும் அளவில் மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சிங்களப் படையினரின் இத்தகைய வன்முறை வெறியாட்டத்திலிருந்து ஈழத்தில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை எத்தகைய கொடூரமான நிலையில் அமைந்துள்ளது என்பதை அறியலாம்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு பொது இடங்களில் கூட பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிறது. சிங்களக் காடையர்களின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.
இந்நிலையில் இந்திய அரசும் தமிழக அரசும் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
தங்கபாலுவும் கண்டனம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய தடியடி தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும்.
அங்கு 26 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இந்நேரத்தில் தமிழர்கள் வாழும் முக்கிய பகுதியான யாழ்ப்பாணத்தில் தமிழர்களை அச்சுறுத்தவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஜனநாயக முறைப்படி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலை சீர்குலைக்க எத்தனிக்கும் இலங்கை அரசின் இப்போக்கு ஜனநாயகத்திற்கு விடும் சவாலாகும். அமைதியாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள் மீது சீருடை அணிந்த ராணுவத்தினர் காரணமின்றி தடியடி நடத்தி விரட்டியுள்ள செயல் மனிதாபிமானமற்ற சர்வாதிகாரத்தனமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பதால் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற நிலை இருக்கிறபோது பொதுமக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
எனவே இலங்கை தமிழர்களுக்கு எதிராக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் இலங்கை ராஜபக்சே அரசின் போக்கை இந்திய அரசு தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மன்மோகன்சிங்கை பெரிதும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications