ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2 பேட்டரி கார்களை தானம் செய்த ஜெயலலிதா
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பக்தர்கள் வசதிக்காக ரூ. 10 லட்சம் சொந்த செலவில் இரண்டு பேட்டரி கார்களை தானமாக அளித்தார்.
இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார் ஜெயலலிதா. பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்ற ஜெயலலிதா, ரங்கநாதர் கோவிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் கார்த்திகா சன்னதி, கருடாழ்வார் சன்னிதி சென்ற ஜெயலலிதா, பின்னர் கோவிலுக்குள் சென்றார். அங்கு பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து ரூ. 14,000 மதிப்புள்ள பட்டு வேட்டியை பெருமாளுக்கு சாத்துமாறு கூறிக் கொடுத்தார்.
மேலும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரூ. 10 லட்சம் சொந்தப் பணத்தில் தலா 11 பேர் மற்றும் 6 பேர் செல்லும் இரண்டு பேட்டரி கார்களை ஜெயலலிதா தானமாக வழங்கினார்.
இந்த பேட்டரி கார்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் அமர்ந்து கோவிலைச் சுற்றிப் பார்க்க முடியும். மாற்றுத் திறனாளிகள் ஆலயத்தை சுற்றிப் பார்க்க பேட்டரி கார் பயன்படுத்தப்படும்.
பின்னர் தான் கொடுத்த பேட்டரி காரில் ஏறி, கார்த்திகா சன்னதியில் இருந்து உடையவர் சன்னதிக்கு வந்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் அங்கிருந்து விடைபெற்று, திருச்சி திரும்பினார்.












Click it and Unblock the Notifications