கருணாநிதி தொடர்ந்த வழக்கிலிருந்து அதிமுக அமைச்சர்கள், சபாநாயகர் விடுவிப்பு
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தின் இறுதியில், முதல்வராக இருந்த கருணாநிதி தொடர்ந்த வழக்கிலிருந்து அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோரை விடுவித்து சென்னை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது.
சட்டசபைத் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது, அரசுத் துறைகளை இடமாற்றுவதாக கூறி முக்கியக் கோப்புகளை அழிக்க திமுக அரசு முயற்சிப்பதாக மேற்கண்டோர் புகார் கூறியிருந்தனர். மேலும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் புகார் மனு கொடுத்தனர்.
இதையடுத்து கருணாநிதி சார்பில் அப்போதைய சென்னை நகர அரசு குற்றவியல் வக்கீல் ஷாஜகான் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
தமிழக அரசை காபந்து அரசு என்று புகார் கூறியுள்ளனர். அரசை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை என்பதால் அவதூறு செய்த குற்றத்துக்காக அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படட்டது. இதையடுத்து மேற்கண்ட நான்கு பேர் மீதான வழக்கையும் வாபஸ் பெறுவது தொடர்பான அரசாணையை அதிமுக அரசு பிறப்பித்தது.
மேலும் இந்த அரசாணையை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்தார். நான்கு பேர் மீதான வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தேவதாஸ், அரசின் கோரிக்கையை ஏற்று, நான்கு பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்தார். நான்கு பேரையும் வழக்கிலிருந்தும் அவர் விடுவித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications