இலங்கை பிடியில் உள்ள 23 மீனவர்களின் குடும்பத்தார் நாளை உண்ணாவிரதம்

கடந்த 20ம் தேதி இலங்கை கடற்படை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களில் 23 பேரையும், 5 படகுகளையும் பிடித்துச் சென்றது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இலங்கை தலைமன்னாரில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 20ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிற்கின்றன.
இலங்கை கடற்படையிடம் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அதிமுக அரசு மெத்தனமாக இருப்பதாகவும், அவர்களை மீட்கும் வரை போராடப்போவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வேலை நிறுத்தம் இன்று 3வது நாளை எட்டியுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை, நாகை, கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை ஆகிய பகுதிகளிலும் மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்ட 23 மீனவர்களின் குடும்பத்தார் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு சிபிஎம் கோரி்க்கை:
இந் நிலையில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள், மீன்கள் கைப்பற்றப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. எனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்து தமிழகத்திற்கு திரும்ப அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மேற்கண்ட பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications