சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது! - சீமானுக்கு விளக்கம்
சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கும் வீட்டு உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த நிறுவனத்தின் தயாரிப்பும் இடம்பெறாது, என்று கண்காட்சியை நடத்துபவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்தக் கண்காட்சியில் நடைபெறும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் என அறிவித்திருந்தனர்.
இதில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களை அனுமதிப்பது தமிழக சட்டப் பேரவை தீர்மானத்தையும், தமிழக மக்களின் உணர்வு களையும் அவமதிப்பதாகும்", சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து அந்தக் கண்காட்சியை நடத்தும் சையது ஜாகிர் அகமது என்பவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "சென்னை வர்த்தக மையத்தில் ஜூன் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை வீட்டு உள் அலங்காரப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியை நடத்த உள்ளோம்.
இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்களோ அல்லது இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களோ நிச்சயம் இடம் பெறவில்லை. இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த பொருளும், தயாரிப்பாளரின் நேர்முகமான அல்லது மறைமுகமான தொடர்பும் இல்லை.
எங்களுடைய நிறுவனத்தின் தகவல் ஏடுகளில் காணப்படும் தகவல்கள் ஏதேனும் தமிழர் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்", என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications