பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை- அமைச்சர்
சென்னை: கூடுதலாக வசூல் செய்யும் பொறியல் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், பொறியியல் பி.இ. மற்றும் பி.டெக். சேர்வதற்கான கவுன்சிலிங் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 45 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த கவுன்சிலிங்குக்கு மாணவ- மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் வருவார்கள்.
அவர்கள் வசதியாக வந்து செல்வதற்கு வசதியாக பந்தல் போடும் பணி தொடங்கி உள்ளது. கவுன்சிலிங் வருபவர்களுக்காக உட்கார இடம், குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படும். மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெற உள்ளது. புதிய இடங்கள் வந்தால் சேர்த்துக் கொள்ளப்படும்.
கவுன்சிலிங்குக்கு வரும் மாணவர்களுக்கும் அவர்களுடன் வருபவருக்கும் பாதி கட்டண சலுகை உண்டு. அவர்கள் கண்டக்டரிடம் கவுன்சிலிங் அழைப்பாணையை காண்பித்தால் போதும்.
என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணத்தை நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி அறிவிக்கிறது. மாணவர்களை பாதிக்காத வகையில் முதல்வர் நவடிக்கைகளை எடுப்பார்.
அவ்வாறு அறிவிக்கப்படும் கட்டணத்தை விட கூடுதலாக எந்தக் கல்லூரியிலும் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம். கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications