அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன்
மதுரை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயாலளருமான ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினருமான எஸ்.கே. கார்வேந்தன் சந்தித்து, அதிமுக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, இந்திய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் எம்.என்.ராவ், உறுப்பினர் கார்வேந்தன் ஆகியோர் நேற்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.
ஜி.கே.வாசன் ஆதரவாளரான கார்வேந்தன் ஜெயலிலதாவை சந்தித்ததால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு நிலவுகிறது.
இந்த சந்திப்பு குறித்து கார்வேந்தன் கூறுகையில்,
இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. இந்திய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பாகச் சந்தித்த நிகழ்ச்சியாகும்.
மேலும், நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்தோம்.
பிற்படுத்தப்பட்டோர் ஒபிசி சான்றிதழ் வாங்குவதில் பல்வேறு சிக்கல் உள்ளது. இவற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கோள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதனை பரிசீலனை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார் என்றார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடதக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே பெரும் விரிசல் விழுந்து, கூட்டணி முறியும் நிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து அதிமுகவை நோக்கி பலரும் பாசப் பார்வை பார்த்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றபோது அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் ராஜ மரியாதை கொடுத்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், சோனியா காந்தியின் நிழலுமான டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கார்வேந்தன் போய் ஜெயலலிதாவைப் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications