விரைவில் கொழும்பு-தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவை-இலங்கை
தூத்துக்குடி: இலங்கை அரசு சார்பில் கொழும்பு-தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவை விரைவில் துவங்க உள்ளது.
தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த 13-ம் தேதி துவங்கியது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி. கே. வாசன் கப்பல் போக்குவரத்தை துவங்கி வைத்தார். இந்த சேவையில் ஈடுபட்டுள்ள ஸ்கார்டியா பிரின்ஸ் கப்பல் அறிவிக்கப்பட்ட பயணத்திட்டப்படி தூத்துக்குடி-கொழும்பு இடையே சென்று வருகிறது.
தற்போது குறைவான பயணிகள் சென்று வந்தாலும் ஆகஸ்ட் வரை ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் கப்பல் சேவை தொடர்பாக இந்தியா-இலங்கை இடையிலான ஒப்பந்தப்படி இலங்கை தரப்பிலும் கொழும்பு-தூத்துக்குடி இடையே மற்றொரு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்கான பணியில் இலங்கை அரசு நிறுவனமான சிலோன் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இலங்கை கப்பல் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைச்சக கொள்முதல் குழு கப்பலை தேர்வு செய்யும் பணியி்ல் ஈடுபட்டுள்ளது.
இதில் துபாயைச் சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனத்தின் பயணிகள் கப்பல் இந்த சேவைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இலங்கை கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக உயர் அதிகாரிகள், அமைச்சக கொள்முதல் குழுவினர், சிலோன் ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவன உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 16-ம் தேதி துபாய் சென்று பயணிகள் கப்பலை பார்வையிட்டு வந்துள்ளனர்.
அநேகமாக இந்த பயணிகள் கப்பலே கொழும்பு-தூத்துக்குடி சேவைக்கு இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முதல் கட்டமாக வாரத்தில் 3 நாட்கள் கொழும்பு-தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தூத்துக்குடி-கொழும்பு இடையே ஸ்கார்டியா பிரின்ஸ் கப்பல் இயக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை தரப்பில் புதிய கப்பல் இயக்கப்படும்போது தினமும் கொழும்பு-தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications