லிபிய அதிபர் மும்மர் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உத்தரவிட்டதாகவும் கடாபி மீது நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
லிபியாவில் கடந்த பிப்ரவரி மாத மத்தியிலிருந்து பெரும் கலவரம் வெடித்தது. கடாபிக்கு எதிரான அதிருப்தியாளர்கள் படை பலத்துடன் மோதலில் குதித்ததால், அவர்களுக்கும், கடாபி ஆதரவு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்தது. இதில் சிக்கி இதுவரை பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடாபியை ஒடுக்க எதிர்ப்புப் படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் போரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சி மோனகேங் கூறுகையில், கடாபியும், அவரது மகனும், குற்றம் இழைத்தவர்கள் என்று நம்புவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. அப்பாவி மக்களை கொன்ற குற்றச்சாட்டுக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக உள்ளனர். அவர்களது குற்றங்கள் தண்டனைக்குரியவை என்றார்.
கடாபிக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மோரினோ ஒகாம்போ கடந்த மே மாதம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது வாரண்ட்டை இங்கிலாந்து வரவேற்றுள்ளது.
ராஜபக்சேவுக்கு??
கடாபியை விட மிகக் கொடுமையான தாக்குதலுக்கு உத்தரவிட்டனர் இலங்கையின் அதிபராக இருந்து வரும் ராஜபக்சே. அவரும், தம்பி கோத்தபயா ராஜபக்சே, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் ஆடிய வெறியாட்டத்திற்கு லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று காட்டுக் கத்தலாக பல்வேறு நாடுகளிலும் தமிழர்களும், பிற அமைப்பினரும் கூறி வரும் நிலையில் அதுகுறித்து ஒரு நாடும் கண்டு கொள்ளாமலேயே உள்ளன. இந்த நிலையில் கடாபிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications