கேரள மாணவி பலாத்காரம்-தமிழக மின்வாரிய அதிகாரி கைது, 9 பேருக்கு வலைவீச்சு
நாகர்கோவில்: கேரள மாணவி பலாத்கார வழக்கில் கோவையை சேர்ந்த மின்வாரிய அதிகாரியை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரித்ததில் இந்த வழக்கில் கோவையைச் சேர்ந்த மேலும் 9 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கேரளாவில் பள்ளி மாணவியை அதிகாரிகள், தொழில் அதிபர்கள் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 100 பேர் வரை மாணவியை சீரழித்து இருப்பதாக எர்ணாகுளம் குற்ற்பிரிவு போலீசார் தயாரித்துள்ள முதல் கட்ட பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் கண்ணூமாமூட்டை சேர்ந்த காண்டிரக்டர் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் நடந்த விசாரணையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் நெடுஞ்சாலைதுறை, பொதுப்பணிதுறை, கலெக்டர் அலுலவக அதிகாரிகள் பலருக்கு மாணவியின் பலத்கார சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் கைதான விபசார புரோர்க்கள் கொடுத்து வரும் தகவலின் அடிப்படையில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்த மார்கீஸ்ட் நிர்வாகி தாமஸ் வர்கீஸ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
கேரளாவைச் சேர்ந்த பெண் புரோக்கர் பீனா என்பவர் மூலம் மாணவியை அழைத்து வந்த இவர் பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவரது உறவினர் ஒருவரையும் இந்த வழக்கில் போலீசார் தற்போது கைது செய்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக கோவை குருடம்பாளையம் மணி நகரைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி முருகேசன் என்பவரை கேரள தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன் விபசார புரோக்கர்களாக செயல்பட்ட கேரளாவைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மூலம் மின்வாரிய அதிகாரி கோவைக்கு மாணவியை அழைத்து சென்று அங்கு வைத்து பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த விபரங்களை இப்போதைக்கு வெளியிட முடியாது என தனிப்படை போலீசார் கூறியுள்ளனர்.
மின் வாரிய அதிகாரி முருகேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவையைச் சேர்ந்த மேலும் 9 அதிகாரிகளுக்கு மாணவி கற்பழிப்பு வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அவர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
இதற்காக கேரள குற்றப்பிரிவு போலீசில் இந்த வழக்கை விசாரிக்க கூடுதலாக 20 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறார்கள். இதனை மேற்பார்வையிட போலீஸ் துணை சூப்பிரண்டு பிஜு அலெக்சாண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனி இவரது வழிகாட்டுதலின் படி மாணவியை சீரழித்தவர்களை பிடிக்கும் பணியில் தனிப்படையினர் செயல்படுவார்கள். இவர்களது நடவடிக்கை வேகம் எடுத்தால் இன்னும் பல உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய நபர்களின் வேஷம் கலையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர குமரி காண்டிராக்டர் மணிகண்டன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய இனஸ்பெக்டர் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். கடந்த 20 நாட்களுக்கும் மேல் இந்த இன்ஸ்பெக்டர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருக்கிறது.
இவர் கேரள தனிப்படை பிடியில் தான் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் கேரள தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டரை தீவிரமாக தேடி வருவதாகவும், இன்று அல்லது நாளைக்குள் அவர் கைது செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications