+2 மறு கூட்டல், மறுமதிப்பீடு: மதிப்பெண் விபரம் இந்த வாரம் வெளியீடு?
நாகர்கோவில்: தமிழகத்தில் பிளஸ் டூ மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்தவர்களுக்கு இந்த வாரம் மதி்ப்பெண் விபரங்கள் அளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் பலர் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்வதற்காக விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். 82 ஆயிரம் பேர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் அனைவருக்கும் விடைத்தாள் நகல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
விடைத்தாள் நகலுடன், மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏராளமான மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
விடைத்தாள் மறுகூட்டல், மறுமதி்ப்பீடு செய்யும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இதில் மதிப்பெண்களில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிந்த பின்னர் கிடைக்கின்ற மதிப்பெண்களை மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விபரங்கள் அண்ணா பல்கலைக்கழக மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாரம் மாணவர்களுக்கு மதிப்பெண் விபரங்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications