ராம்லீலா மைதான் போராட்டத்தின்போது என்னைக் கொல்லப் பார்த்தது போலீஸ்- ராம்தேவ்
டெல்லி: ராம்லீலா மைதான போராட்டத்தை ஒடுக்கிய போலீஸார் என்னைக் கொல்லவும் துடித்தனர் என்று கூறியுள்ளார் பாபா ராம்தேவ்.
ஜூன் 5ம் தேதி டெல்லி போலீஸாரால் முறியடிக்கப்பட்ட ராம்லீலா மைதான உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின்னர் டெல்லியை விட்டு வெளியேற்றப்பட்ட ராம்தேவ் நேற்று மீண்டும் டெல்லிக்கு வந்தார். அங்கு போராட்டத்தின்போது போலீஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தனது பெண் ஆதரவாளர் ராஜ்பாலாவை ஜிபி பந்த் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பெண்களுக்கும், சிறார்களுக்கும் டெல்லி காவல்துறை இழைத்த அநீதியை உலகமே பார்த்தது.
இன்று ராஜ்பாலா உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவர் பிழைத்து வந்தால் அது மிகப் பெரிய அதிசயம் என்று கூறும் அளவுக்கு அவரது நிலை உள்ளது. நாங்கள் ராஜ்பாலாவை தாக்கவில்லை என்று போலீஸ் கூறுமானால், பின்னர் அவரைத் தாக்கியது யார். அவர் செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவர் உயிருடன் மீண்டாலும் கூட நடமாட முடியாத நிலைக்கு அவரது உடல் நிலை தள்ளப்பட்டுள்ளது.
எனது போராட்டத்தை நசுக்க அரசு எடுத்த முயற்சிகள் கண்டனத்துக்குரியவை. நான் செய்வது சட்டவிரோதமானவை என்று அரசு கூறினால், பிறகு எதற்காக என்னை வரவேற்க மூத்த அமைச்சர்களை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
போலீஸார் என்னைக் கொல்ல முயற்சித்தனர். இதற்காகவே எனது போராட்ட இடத்திற்கு போலீஸார் பெருமளவில் திரண்டு வந்தனர். என்னைக் கொல்ல நடந்த முயற்சியே அது. என்னைக் கைது செய்ய அவர்கள் வரவில்லை. மாறாக கொல்லவே துடித்தனர். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை இப்போது நான் வெளியிட மாட்டேன். உச்சநீதிமன்ற விசாரணை நடந்து வருவதால் அதை என்னால் தர முடியாது.
நான் இருந்த மேடை தீப்பிடித்து எரிந்ததற்குக் காரணம் போலீஸார்தான். என்னைக் கொல்ல நடந்த முயற்சிகளில் அதுவும் ஒன்று. அதை அணைக்க எனது ஆதரவாளர்கள் முயன்றபோது அவர்களைத் தடுக்கும் வகையில் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது போலீஸ்.
எனது சீடர் பால்கிருஷ்ணா பாஸ்போர்ட் பெற்றதை பெரிதுபடுத்துகிறார்கள். அவர் சட்ட ரீதியாகத்தான் பாஸ்போர்ட் பெற்றார். அவரைக் குற்றம் சாட்டுபவர்கள், ஏன், அந்த பாஸ்போர்ட்டை வழங்கிய அதிகாரிகளை, அரசைக் குற்றம் சாட்டுவதில்லை.
நான் எந்தக் கட்சியின் முகமூடியும் அல்ல. ஊழல் எந்தக் கட்சியில் இருந்தாலும், எந்த ஆட்சியில் இருந்தாலும், எந்த மதத்தில் இருந்தாலும் நான் முழு மூச்சாக எதிர்ப்பேன்.
இந்த அரசுக்கு ஊழலை எதிர்த்துப் போராடி, ஒழிக்கும் தைரியம் கிடையாது. அதற்கான அரசியல் தைரியம் இந்த அரசிடம் இல்லை. லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் திட்டமும் இந்த அரசிடம் இல்லை.
லோக்பால் மசோதாவை அரசு உரிய முறையில் நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் 16ம் தேதி அன்னா ஹஸாரேவுடன் இணைந்து நானும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications