உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக பிரதமருக்கு பிரணாப் எழுதிய கடிதத்தை வெளியிடுக- பாஜக
டெல்லி: தனது அலுவலகம் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தை பிரதமர் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. எனவே அதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். இது கேலிக்கூத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய சர்க்கஸ் நிகழ்ச்சி போல இது மாறியுள்ளது.
உள்துறை அமைச்சரின் கீழ்தான் ஐபி வருகிறது. அது நடத்தி வரும் விசாரணை குறித்து தனக்குத் தெரியவில்லை என்கிறார் உள்துறை அமைச்சர். இது மிகப் பெரிய கேலிக்கூ்ததாக உள்ளது. அதேபோல ஐபியை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பவில்லை. இதனால்தான் நேரடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்கிறார் உள்துறை அமைச்சர்.
இது சிதம்பரத்திற்கு வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு, அரசின் உயர் மட்டத் தலைவர்களுக்கிடையே நம்பகத்தன்மை இல்லை என்பதை வெளிக்காட்டும் சம்பவமாக அமைந்துள்ளது.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் மிகவும் மூத்த அமைச்சர் பிரணாப். ஆனால் அவர் உள்துறை அமைச்சர் மீது நம்பிக்கை கொள்ளாமமல் இருக்கிறார். பிரதமருக்கு நேரடியாக கடிதம் எழுதுகிறார். தனது அலுவலகம் உளவு பார்க்கப்பட்டதாக கூறுகிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூத்த அமைச்சர்கள் ஒருமித்து செயல்படுவதில்லை என்பதையே இது காட்டுகிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்பதை விளக்க வேண்டிய அவசியம் பிரதமருக்கு உண்டு.
பிரணாப் தனக்கு எழுதிய கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக வெளியிட்டு உண்மைகளை அனைவரும் அறியும்படி செய்ய வேண்டும் என்றார் பிரசாத்.












Click it and Unblock the Notifications