திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நகைக் குவியலா?-பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது பத்மநாபசுவாமி கோவில். புராதான சிறப்பு மிக்க இக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோவில் தற்போது வரை திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுபாட்டின் கீழ் இருந்து வருகிறது.
இக்கோயிலில் 6 பாதாள அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவறறில் விலை மதிப்பற்ற ரத்தினங்கள், தங்கக் குவியல்கள் உள்பட ஏராளமான ஆபரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் 2 அறைகள் 1875-ம் ஆண்டுக்கு பிறகு திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கோயில் பாதாள அறையில் உள்ள நகைகளை கணக்கெடுக்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் அய்யர் என்பவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் நகைகளை கணக்கெடுக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. சிவில் நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பையும் எதிர்த்து மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இருவர் முன்னிலையில் இன்று பாதாள அறைகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டன.
கேரள உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் கிருஷ்ணன் மற்றும் ராஜன் முன்னிலையில் நான்கு அறைகள் திறக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
ஆய்வின்போது பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆய்வு முடிந்ததும் அதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications