மாயாவதியின் உ.பியில் பெண்களுக்கு பேராபத்து- 2 வாரத்தில் 14 பேர் கற்பழிப்பு
லக்னோ: முதல்வர் மாயாவதியின் ஆட்சியில் உ.பியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை படு வேகமாக ஏற்பட்டு வருகிறது. 2 வாரங்களில் மட்டும் 14 பேர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்தால் மாயாவதி அரசு பெரும் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது.
சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவேன், கட்டிக் காப்பேன் என்று கூறித்தான் உ.பியில் ஆட்சியைப் பிடித்தார் மாயாவதி. ஆனால் தற்போது அடுத்த தேர்தலை விரைவில் சந்திக்கவுள்ள நிலையில் அவரது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு படு மோசமாகி வருகிறது.
எங்கு பார்த்தாலும் கற்பழிப்புச் சம்பவங்களாக உள்ளன. கடந்த 2 வாரங்களில் மட்டும் 14 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் டீன் ஏஜ் வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமையன்று 10 வயதேயான 3வது படிக்கும் சிறுமியை, பாரபாங்கியில் உள்ள இப்ராகிம்பூர் கிராமத்தில், 20 வயதான சிவக்குமார் என்ற இளைஞன் அருகில் உள்ள வயலுக்குக் கூட்டி்ப போய் கற்பழித்துள்ளான். பின்னர் அந்தச் சிறுமியை குச்சிகளால் கடுமையாக அடித்து படுகாயப்படுத்தி விட்டு தப்பி ஓடி விட்டான்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் லக்னோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெருமளவில் ரத்தம் போய் விட்டதால் அந்தச் சிறுமியின் உயிர் ஊசலாடுகிறது.
இதேபோல ஹத்ராஸ் அருகே சாஸ்னி என்ற இடத்தில் இன்னொரு சிறுமியும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். அந்தச் சிறுமியின் பெற்றோர் நோய்டாவுக்குப் போயிருந்தனர். வீட்டில் சிறுமி மட்டும் இருந்துள்ளாள். அப்போது உள்ளே புகுந்த ஒரு அயோக்கியன் சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டான்.
கடந்த வாரத்தில்தான் 48 மணி நேரத்தில் 8 கற்பழிப்புச் சம்பவங்கள் நடந்து நாட்டையே அதிர வைத்தது என்பது நினைவிருக்கலாம்.
தொடர் கற்பழிப்புச் சம்பவங்களால் மாயாவதி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கற்பழிப்புக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மாயாவதி.
அதேசமயம், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி புரியும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கூட கற்பழிப்புகள் நடக்கத்தான் செய்கின்றன. ஏன் டெல்லியிலே கூட நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை. அதேசமயம், உ.பியில் ஏதாவது நடந்தால் மட்டும் பெரிதாகப் பேசுகிறாரக்ள். ஒரு தலித் தலைவி பதவியில் இருப்பதை மத்தியில் உள்ளவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுதான் காரணம் என்றார் அவர்.
இதற்கிடையே, லக்னோவில் இன்று காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாயாவதி அவசர ஆலோசனைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அக்கூட்டத்தில் கற்பழிப்புகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications