இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு வட மாநிலங்களில் மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா

மதுரையில் நடந்த திருக்குறள் குறித்து டாக்டர் கு. கண்ணன் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதிய உரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார் சாலமன் பாப்பையா.
அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று வந்துள்ளனர். அவற்றையே, தமிழகத்தில் கிடைக்கும் அரிய சொத்தாகவும் அவர்கள் கருதி வந்தனர். ஆனால், தமிழகத்துக்கு வந்த வீரமாமுனிவர் மட்டுமே, திருக்குறளை லத்தீன் மொழிக்கு எடுத்துச் சென்றார்.
அதன்பிறகே, தமிழகத்தில் அரிய சொத்தாக திருக்குறள் போன்ற நூல்கள் இருப்பதை, வெளிநாட்டறிஞர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். அதன்பிறகுதான், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 35-க்கும் மேற்பட்ட பதிப்புகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழை இந்தி அழித்துவிடும் என நடந்த பிரசாரத்தால், தமிழகத்தில் இந்தி கற்பது தடைபட்டது. இந்தி தமிழை அழித்துவிடும் எனக் கூறியே, இந்தி எதிர்ப்பு பிரசாரம் நடந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம்தான் தமிழை அழித்து வருகிறது. இந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில் மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கியிருக்க முடியும். இந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.
தற்போது திருக்குறள் உரை நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி உரையைப் புகுத்தி இருப்பது சிறப்பாகும் என்றார் பாப்பையா.












Click it and Unblock the Notifications