போலி பெண் சப் இன்ஸ்பெக்டர் மதுரையில் கைது-10 அதிகாரிகள் ஆதரவு இருப்பதாக கூறுகிறார்!
மதுரை: மதுரையில் போலி பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தப் பெண்ணுக்கு வயது 18தான் ஆகிறது. பத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் கடந்த ஒரு வருடமாக போலி போலீஸ் அதிகாரியாக மதுரையை வலம் வந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழகத்தையே உலுக்கியவர் ஜெயலட்சுமி. போலி பெண் போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு காவல்துறையையேய கலக்கியவர் ஜெயலட்சுமி. இவருடன் தொடர்பு வைத்து சில காவல்துறை அதிகாரிகளும் சிக்கினர்.
ஜெயலட்சுமி சிவகாசியைச் சேர்ந்தவர். இந்த நிலையில் மதுரையில் கடந்த ஒரு வருடமாக போலி சப் இன்ஸ்பெக்டராக வலம் வந்த 18 வயதுப் பெண் பிடிபட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் நாகராணி. மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் போலீஸ் சீருடையில் மக்களிடம் மிரட்டிப் பணம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த அண்ணாநகர் போலீஸாருக்கு இவர் மீது சந்தேகம் வந்தது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அவரை கொண்டு சென்றனர்.
அங்கு உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் உண்மையைக் கக்கினார் நாகராணி. அவருக்கு வயது 18தான் ஆகிறது. அவர் கூறுகையில், எனக்கு 10 காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்கள் கொடுக்கும் ஆதரவுடன்தான் நான் போலி பெண் சப் இன்ஸ்பெக்டராக வலம் வருகிறேன். கடந்த ஒரு வருடமாக இப்படி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் நாகராணி.
மேலும், அந்தப் பத்து அதிகாரிகளால் தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் நாகராணி கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் என்னென்ன மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். இவர் கூறும் 10 அதிகாரிகள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நாகராணியிடம் மேலும் விசாரணை நடத்தும்போது ஜெயலட்சுமி ரேஞ்சுக்கு அவரும் ஏதாவது பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டாரா என்பது தெரிய வரும். நாகராணி விவகாரத்தால் தென் மாவட்ட காவல்துறையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications