திமுகவின் தங்கம் தென்னரசு வெற்றியை எதிர்த்து மூமுக இசக்கிமுத்து வழக்கு
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுயில் வெற்றி பெற்றதை எதிர்த்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான ச. இசக்கிமுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 19 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணிக் கட்சியான அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான ச. இசக்கிமுத்து தென்னரசின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழ்ககு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
தேர்தல் நேரத்தில் திருச்சுழியில் தங்கம் தென்னரசு ஆதரவாளர்களும், திமுகவினரும் சேர்ந்து அப்பகுதி வாக்காளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின் உருவம் பொறித்த பனியன்களை வழங்கினர். அவர்களை நாங்கள் கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.
இது தவிர திருச்சுழி, பல்லாங்கிணறு, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் ஆசிரியர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் தங்கம் தென்னரசு பணப் பட்டுவாடா செய்ய ரூ. 34 கோடி வரை செலவளித்துள்ளார் என்று கட்சியினர் மற்றும் மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
இது தேர்தல் விதிமீறல் ஆகும். எனவே, தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், இந்த தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications