உப்பு என்ற போர்வையில் 10,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் கடத்தல்!
சென்னை: உப்பு என்ற போர்வையில் கண்டெய்னர் நிறைய 10,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருட்களை அனுப்பி அதை சென்னையிலிருந்து கப்பல் மூலம் அந்தமானுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரை அந்தமான் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து ஒரு சரக்குக் கப்பலில் கண்டெய்னர் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் உப்பு ஏற்றப்பட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டு அனுப்பியுள்ளனர். கண்டெய்னர் அந்தமானுக்கு வந்து இறங்கிய பின்னர் அதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் அதில் உப்பு இல்லை. மாறாக, பெருமளவில் வெடி்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். 6000 டெட்டனேட்டர்கள், 300 ஜெலட்டின் குச்சிகள் உள்பட 10 ஆயிரம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் அதில் இருந்தது.
இதையடுத்து அந்தமான் போலீஸ் குழுவினர் சென்னை விரைந்துள்ளனர். விசாரணை நடத்தியதில் இந்தப் பொருட்களை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது சிவகங்கையைச் சேர்ந்த அப்பாஸ் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து வேலூர் மற்றும் சென்னையில் அந்தமான் போலீஸாரும், தமிழக கியூ பிரிவு போலீஸாரும் இணைந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மேலும் சிலர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications