குரும்பூர் அருகே வானவெடிகள் வெடித்து 3 பேர் பலி
குரும்பூர்: குரும்பூர் அருகே வானவெடி தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் கருகி பலியானர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூரை அடுத்த குலைக்காநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சத்தியசீலன். இவர் அரசு உரிமம் பெற்று வாணவெடிகள் தயாரித்து வருகிறார்.
இதற்காக அங்குள்ள மேலகுளம் பகுதியில் சிறிய வீடு அமைத்து தொழிலாளர்கள் வெடி தயாரித்து வந்தனர். நேற்று உடன்குடி ஜேஜே நகரை சேர்ந்த ஜோசப் மகன் மரியசிலுவை, நாசரேத் முத்துராமலிங்கம் மகன் சின்னத்துரை, குலைக்காநாதபுரம் பால்துரை, உரிமைகாடு ஜெயசிங் ஆகியோர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாலை 4.30 அளவில் வெடி தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக வெடிமருந்துகள் உராய்வின் காரணமாக தீ பற்றியது. இதையடுத்து ஏற்கனவே தயாரித்து காய வைக்கப்பட்டிருந்த வெடிகளுக்கும் தீ பரவியது. இதனால் வெடிகள் பயங்கரமாக வெடித்து சிதறின. இதில் சிக்கிய மரியசிலுவை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
திருச்செந்தூர் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி நட்டார் ஆனந்தி தலைமையில் வீரர்களும், சாகுபுரம் டிசிடபிள்யூ கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து மாரியப்பன் தலைமையிலான வீரர்களும் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எஸ்பி நரேந்திரன் நாயர், திருச்செந்தூர் கோட்டாசியர் பொற்கொடி, தாசில்தார் வீரசாமி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், குரும்பூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், கைலாஷ், கதிரேசன், சோலை, கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னத்துரை, பால்துரை, பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஜெயசிங்கின் நிலையும் கவலைகிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications