'கேரளாவுடன் பேசாதீங்க!' - ராமதாஸ் யோசனை
சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு விடுத்துள்ள அழைப்பை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் என்பதே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதுதானே தவிர, புதிய அணை கட்டுவது தொடர்பானது இல்லை.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதைத் தவிர்ப்பதற்காகத்தான் புதிய அணை கட்ட வேண்டும் என்ற புதிய விவகாரத்தை கேரள அரசு கையில் எடுத்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கின் விசாரணை விரைவில் முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பது ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தமிழகத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதைத் தெரிந்து கொண்டுதான் இந்த விவகாரத்தை மேலும் தாமதப்படுத்தும் நோக்குடன் தமிழக அரசைப் பேச்சு நடத்த வரும்படி கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கேரள அரசின் இந்த வஞ்சக வலையில் தமிழக அரசு ஒரு போதும் விழுந்துவிடக்கூடாது. கேரள அரசின் அழைப்பை ஏற்று பேச்சு நடத்தினால், இந்த விவகாரத்தில் தமிழகம் 125 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல நேரிடும். அதுமட்டுமின்றி தமிழகத்தின் 5 மாவட்ட உழவர்கள் தங்கள் வாழ்வாதார உரிமைகளை இழக்க நேரிடும்.
எனவே, ஆளுநர் உரையில் அறிவித்தவாறு முல்லைப் பெரியாறு சிக்கல் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுவிட்ட நிலையில், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தின் மூலமாக நியாயமான தீர்ப்பைப் பெறுவதற்குத்தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எக்காரணத்தைக் கொண்டும் புதிய அணை பற்றி பேச்சு நடத்துவதற்கான கேரள அழைப்பை ஏற்கவே கூடாது.
- இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications