குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றம்: பிரதமர்
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு தீவிரமாக உள்ளது.
லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியிருந்தார்.
அந்த கூட்டத்தி்ல பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது,
ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை தான் என்றாலும் அவை எளிமையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரித்து தண்டிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதல்ல என்ற கருத்து நிலவி வருகிறது.
உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரி்க்க லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதிலும், இதன் மூலம் ஊழல் புகார்களை விரைந்து விசாரித்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது. இந்த மசோதைவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரமாக உள்ளது.
பொதுமக்கள் பிரதிநிதிகளின் சில கோரி்க்கைகள் இணையான அரசுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. அரசமைப்பு சட்டத்துக்குட்பட்டுத்தான் லோக்பால் அமைப்பின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
லோக்பால் மசோதா பிற சட்டங்களிலிருந்தும், ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளிலிருந்தும் திசை மாறிவிடக்கூடாது. அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே உள்ள சட்டவிதிகளை லோக்பால் மசோதாவில் முறையாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
தற்போது ஊழல் பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக உள்ளது என்பதை அரசு மறுக்கவில்லை.
ஏற்கனவே ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம், அந்நிய செலாவணி மோசடி தடைச் சட்டம், மத்திய கண்காணிப்பு ஆணையச் சட்டம், தகவல் அறியும் சட்டம் போன்றவை உள்ளன. அவற்றில் கடுமையான தண்டனை அளிக்கும் விதிகளும் உள்ளன.
லோக்பால் வரைவு மசோதாவை தயாரிப்பதில் ஒரு சில விஷயங்களைத் தவிர மற்றவற்றில் கருத்து ஒற்றுமை உள்ளது. முக்கியத்துவம் வாயந்த லோக்பால் சட்டத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களையத் தான் இந்த கூட்டத்தை கூட்டினேன் என்றார்.












Click it and Unblock the Notifications