13 வயது சிறுவனை ராணுவம் சுட்டுக் கொன்றது இதயங்களை உலுக்கும் படுகொலை-ராமதாஸ்
சென்னை: 13 வயது சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம் இதயங்களை உலுக்கி விட்ட படுகொலை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்து அங்குள்ள மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற சிறுவன் தில்ஷனை ராணுவ வீரர் ஒருவர் இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்றது அனைவரின் இதயங்களையும் உலுக்கியுள்ளது. தில்ஷனின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுமுறை நாளில் விளையாடச் சென்ற சிறுவனுக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.
அவன் ஒன்றும் தீவிரவாதியில்லை. சொல்லப்போனால் ராணுவக் குடியிருப்புக்குள் நுழைவது தவறு என்று கூட அவனுக்கு தெரிந்திருக்காது. ஒரு சிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்றுள்ளது கண்டிக்கத்தக்கது. மனிதநேயம் உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனைக் காப்பாற்றாமல் அவன் மீது இலை, தழைகளைப் போட்டு மூடியுள்ளனர். பாதுகாப்பு அதிகம் உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் ராணுவத்தினரைத் தவிர வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது.
சிறுவனைக் கொன்ற ராணுவ வீரரை தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து அவருக்கு அதிக பட்சமாக தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications