வீடு அபகரிப்பு, கொலை மிரட்டல்: திமுக நிர்வாகி அறிவுடைநம்பி கைது
திருச்சி: திருச்சியில் வீடு அபகரிப்பு புகாரில் திமுக நிர்வாகி அறிவுடைநம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலா (45). உறையூர் நாச்சியார்பாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு வீட்டை அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியும், கோட்ட தலைவருமான அறிவுடைநம்பி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.
ஆனால் அறிவுடை நம்பி பல மாதமாக வீ்ட்டு உரிமையாளர் கமலாவுக்கு வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். கமலா பலமுறை நேரில் சென்று வாடகை பாக்கியை கேட்ட போதும் வாடகை மட்டும் கிடைத்தபாடு இல்லை.
இது குறித்து கடந்த திமுக ஆட்சியின் போது உறையூர் காவல் நிலையத்தில் கமலா புகார் கொடுத்துள்ளார். ஆனால் தவறு செய்த கோட்ட தலைவர் அறிவுடைநம்பி மீது வழக்கு பதிவு செய்யாமல் கமலாவை போலீசார் மிரட்டி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகின்றது.
இதனால் தனது வீட்டை காலி செய்யுமாறு அறிவுடை நம்பியிடம் கமலா கூறியுள்ளார். இனால் ஆவேசம் அடைந்த அறிவுடை நம்பி கமலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து கமலா திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் புகார் மனு கொடுத்தார்.
இப்புகாரின் பேரில் திமுக நிர்வாகியும், கோட்ட தலைவருமான அறிவுடைநம்பியை உறையூர் போலிசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications