ராணுவ வீரர்கள் யாரும் தில்ஷனை சுடவில்லை-தொடர்ந்து பிடிவாதமாக மறுக்கும் ராணுவம்
சென்னை: ராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர்தான் சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்றது என்பது தெளிவாகத் தெரிந்தும் கூட, ராணுவ வீரர்கள் யாரும் சுடவில்லை என்று ராணுவத் தரப்பில் தொடர்ந்து பிடிவாதமாக மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் சிபிசிஐடி போலீஸார் கடும் எரிச்சலடைந்துள்ளனர். தீவுத் திடல் ராணுவக் குடியிருப்பு வளாகத்திற்குள் மரத்திலிருந்து விழுந்த பாதாம் பழங்களைப் பறிக்க முயன்றபோது 13 வயதேயான சிறுவன் தில்ஷனை அநியாயமாக சுட்டுக் கொன்று விட்டனர்.
சுட்டுக் கொன்ற ராணுவக் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர்தான் என்பதை நேரில் பார்த்த சிறுவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ராணுவம் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதுகுறித்து ராணுவ பிரிகேடியர் சசி நாயர் கூறுகையில்,
ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் காவல்வீரர்கள் கையில் துப்பாக்கி வைத்திருப்பது இல்லை. எனவே, துப்பாக்கியால் சுட்டது யார்? என்பது பற்றி விசாரித்துத்தான் முடிவுக்கு வர முடியும் என்று கூறியுள்ளார்.
அப்படியானால் ராணுவ அதிகாரிகள் யாரேனும் சுட்டார்களா என்ற கேள்விக்கு ராணுவத்திடமிருந்து பதில் ஏதும் இல்லை.
இந்த நிலையில், சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் தில்ஷன் என்ற 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவம், ராணுவ அதிகாரிகளை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில், துப்பாக்கியுடன் எந்த ராணுவ வீரரும் பணியில் இல்லை.
குற்றவாளியை கண்டறியும் பணியில் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவனின் மரணத்திற்கு காரணமான நபரை சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவோம் என்று மட்டும் கூறியுள்ளனர்.
சிபிசிஐடி போலீஸாரை சுதந்திரமாக செயல்பட விட்டால் உடனடியாக குற்றவாளியை அவர்கள் பிடித்து விடுவார்கள். ஆனால் அப்படிச் செய்யாமல், நாங்கள் சுடவில்லை, சுடவில்லை என்று மட்டும் ராணுவம் கூறி வருவதால் ஏற்கனவே கடும் கோபத்துடன் உள்ள பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications