கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நேற்று திடீர் என்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார், தோட்டியோடு, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், குலசேகரம், மார்தாண்டம் ஆகிய ஒன்பது இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது.
இதில் 45 பேர் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் பாபுநேசகுமார் என்பவர் சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சக டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
மண்டல மேலாளர் எங்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வருகிறார். மாதம் குறைந்தது 100 பேரையாவது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். எங்களை வெறும் பில்லில் கையெழுத்துப் போடுமாறு கட்டாயப்படுத்துகிறார். இதையெல்லாம் நாங்கள் யாரிடமாவது கூறினால் உடனே இடமாற்றம் தான் என மிரட்டுகிறார். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இது பற்றி விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் ஆஷிஸ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் அவர்கள் நேற்று மாலை 4 மணி வரை வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர்.












Click it and Unblock the Notifications